பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் ஊடகவியாளர்கள் பற்றி அவதூறான வகையில் மிகவும் கீழ்த்தரமான கருத்து பதிவிடப்பட்டிருந்ததால் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊடகவியலாளர்கள் போராடிய போது இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியே வந்து எந்த விளக்கமும் தரவில்லை. இந்நிலையில் சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டை ஊடகவியலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் எஸ்.வி. சேகர் வெளியே வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதற்கு மன்னிப்பு என்று ஒரு அறிக்கை விடுவது பிரச்னைக்கான தீர்வு அல்ல. எஸ்.வி. சேகர் வெளியே வந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடகவியாளர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களைப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.