தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு குஜராத் எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் நேற்றோடு, 100 நாட்களை எட்டியது. இதையடுத்து, தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராமமக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, 144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, தடையையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து, போலீஸின் மிருகத்தனமான செயலுக்கு குஜராத் எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தூத்துக்குடியில் என்னத்தான் நடக்கிறது? தூய்மையான காற்றுக்காகவும், வாழ்வதற்கு நல்ல சுற்றுச்சூழல் வேண்டுமெனவும் போராடிய மக்களை போலீஸ் கொல்வதா? அரசாங்கம் வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் காசுக்காக கூட்டுச் சேர்ந்துள்ளது. மிகவும் கேவலமானது' என்று கூறியுள்ளார்