மன அழுத்தத்தை சரிசெய்யும் வாழைப்பழம்
நம் முன்னோர்கள் வாழைப்பழத்தின் மகிமையை அறிந்திருக்கிறார்கள். எனவே தான் அனைத்து வழிபாட்டிற்கும் வாழைப்பழத்தினை முக்கியமாக வைக்கிறோம்.

நம் முன்னோர்கள் வாழைப்பழத்தின் மகிமையை அறிந்திருக்கிறார்கள். எனவே தான் அனைத்து வழிபாட்டிற்கும் வாழைப்பழத்தினை முக்கியமாக வைக்கிறோம். அது மட்டுமின்றி திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் போன்றவற்றிற்கும் முக்கியமாக வாழைப்பழம் வைத்துக் கொண்டாடுகிறோம்.
வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப்பழம் இருக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள டிரிப்தோபன் எனும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.
வாழைப்பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப்பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப்பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
மலச் சிக்கலுக்கு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு. ஏழைகளுக்கும் ஏற்ற பழம் வாழைப்பழம்.