தொற்று மூலம் பரவும் புற்றுநோய்
நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும்.

சில தொற்று நோய்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.
'ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதனை அருந்துபவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். இதற்கு சிகிச்சை எடுக்க தவறினால், நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும்.
ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கும் இந்த நோய் வருகிறது. இது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும்.
'ஹெச்.ஐ.வி.' தொற்று காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைந்து போவதால் தோல், நிணநீர் கணுக்கள், கல்லீரல், கருப்பை வாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.