வடக்கில் இந்து மாநாடு நடத்த தீர்மானம் - சுரேன் ராகவன்
வட. மாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு இல்லாமற்செய்து வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கை வடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வட. மாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு இல்லாமற்செய்து வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்களுக்கு ஆக்கபூர்வமாக காணப்படுவதனை தான் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்ட நல்லை ஆதீன பிரதம குருக்கள், மக்களுக்கான இந்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.