டெல்லியில், கடந்த 2012ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான 6 பேரில், ஒரு சிறுவன் தண்டனை காலம் முடிந்து விடுதலையானான்.
மற்ற ஐவரில், ஒருவன் உயிரிழந்துவிட, நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நால்வரும், வருகிற ஒன்றாம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட உள்ளனர்.
இந்நிலையில், நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளில், முகேஷ் சிங் என்பவன், தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.