உள்விவகாரங்களில் பன்னாட்டு அரசுகள் தலையிடவே முடியாது - பிரதமர்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து நாம் வெளியேறியுள்ளோம்

"சிறிலங்காவுக்கு இறைமை இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. சட்ட வரையறைகள் இருக்கின்றன. அரசமைப்பு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் மீறி உள்விவகாரங்களில் பன்னாட்டு அரசுகள் தலையிடவே முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
"தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் போராடி கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும்போது அதற்கு நாம் எவ்வாறு இணை அனுசரணை வழங்குவது?
அதனால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து நாம் வெளியேறியுள்ளோம் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
உள்நாட்டுக்குள் பொறிமுறை ஒன்றை உருவாக்கித்தான் பொறுப்புக்கூறல் கடமையை எம்மால் செய்ய முடியும் என்பதையும், பன்னாட்டுப் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கவேமாட்டோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் கிடையாது. இதை ஐ.நாவும் உலக நாடுகளும் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார்.