‘இளையராஜா இசை அமைத்ததாக நீங்க நினைக்கும் பல பாடல்கள் நான் இசை அமைத்தவை’: கங்கை அமரன்
இளையராஜா இசையமைத்தாக பெயர் வரும் பல பாடல்களுக்கு தான் இசையமைத்ததாக கங்கை அமரன் தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இளையராஜா. அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் இசை பாணியை மாற்றியவரும் இளையராஜா தான். இளையராஜா இசை இல்லாமல் நிறைய பேருக்கு எந்த வேலையும் ஓடாது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனது பாடல்கள் மூலம் நீங்கா இடம் பிடித்தவர் இளையராஜா. தனது சகோதரர்களுடன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா 1975 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின.
இதனையடுத்து இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். இயக்குனர்கள் இளையராஜாவின் இசைக்காக அவரது ஸ்டூடியோவில் காத்துக்கிடந்தனர். ஒரு படத்திற்கு இளையராஜா இசை என்றால் போதும், அந்த படம் வெற்றி அடைந்து விடும் என்ற அளவிற்கு இளையராஜாவின் புகழ் இருந்தது. ஒரே நேரத்தில் நிறையப் படங்களுக்கு இசையமைத்தாலும், ஒவ்வொரு பாடலையும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் உருவாக்கியவர் இளையராஜா.
முதல் படம் இயக்குபவர்களின் முதல் விருப்பம் இளையராஜா தான். அவர் இசையமைத்து விட்டால் நமது படம் ஓடி விடும் என்று தான் அன்றைய இயக்குனர்கள் இளையராஜாவுக்காக காத்துக் கிடந்தனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தற்போது வெளியான விடுதலை படத்திற்கும் இசையமைத்திருந்தார், அந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றைய ரசிகர்களையும் ரசிக்க வைத்தது. இளையராஜா லேட்டஸ்ட் ஆக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜி வடிவிலான மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். இதன் மூலம் அவர் 2 கே கிட்ஸ்களுக்கும் ஏற்ற வடிவில் இசையமைத்து, இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளார்.
இளையராஜாவைப் போலவே அவரது சகோதரர் கங்கை அமரனும் இசையமைப்பாளர் தான். ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான கங்கை அமரன் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் கோழி கூவுது, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். இதுதவிர பல பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இளையராஜா இசையமைத்ததாக நீங்கள் நினைக்கும் பல பாடல்கள் நான் இசையமைத்தவை. அண்ணன் இளையராஜா வெளியூருக்கு சென்றிருந்தால் நான் தான் இசையமைப்பேன். நான் தனியாக இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னதாக இளையராஜாவிடம் வந்த பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்த ஞானம்தான் என்னையும் இசையமைப்பாளராக்கியது. உதாரணமாக ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்துக்கு நான் இசை. அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்தது நான் தான். ஆனால் பெயர் இளையராஜா என்று தான் வரும். அதையெல்லாம் வெளியில் சொன்னது கிடையாது” என்று கூறியுள்ளார். கங்கை அமரனின் இந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.