வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா'
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் குறித்த விடயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் கவுண்டமணி நடிப்பில் தயாராகி வரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' எனும் படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தின் உருவாகி வரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' எனும் திரைப்படத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் யோகி பாபு, வாசன் கார்த்திக், கஜேஷ், அன்பு மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஓ ஏ கே சுந்தர், ரவி மரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் அரசியல் விவகாரத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்தும் உரத்து பேசும் இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால்... மக்களிடத்தில் வாக்குப்பதிவு செய்ய வேண்டியது அவசியத்தை வலியுறுத்தியும், இப்படத்தை விரைவில் வெளிவிட வேண்டும் என்ற நோக்கத்திலும்.. படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரும் வகையில் படத்தின் நாயகனான கவுண்டமணி- தன்னுடைய பின்னணி பேசும் பணியை தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார். என்பத்திநான்கு வயதை கடந்த கவுண்டமணி தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் டப்பிங் பேசியதை திரையுலகினர் வியந்து பாராட்டுகிறார்கள்.
இதனிடையே இப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதும், கவுண்டமணி- செந்தில் ஜோடியை போல் கவுண்டமணி- யோகி பாபு கூட்டணியும் பேசப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.