கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற நிவாரணம் இல்லை
“இந்த வழக்கை தீர்மானிக்க அமலாக்க இயக்குநரகத்தின் பதில் அவசியமானது மற்றும் முக்கியமானது" என்று கூறிய நீதிமன்றம், ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் அமலாக்க இயக்குநரகம் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
மதுபான கொள்கை வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது. அமலாக்க இயக்குநரகத்தின் வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
அமலாக்க இயக்குநரகம் தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால நிவாரணம் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனு மீது அறிவிக்கை அனுப்பியது. ஏப்ரல் 2-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அவசரமாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் இருந்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், உடனடியாக விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மற்றும் ரிட் மனு ஆகிய இரண்டிற்கும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மனுவின் நகல் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் கூறினார்.
தற்போதைய வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது இறுதி நிவாரணம் வழங்குவதற்கு சமம் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
"இங்கு மனுதாரர் உடனடியாக விடுவிக்க தகுதியுள்ளவரா இல்லையா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு, இந்த நீதிமன்றம் பிரதான மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அந்த பிரச்சினைகள் மனுதாரரை உடனடியாக விடுவிக்கக் கோரும் மனுதாரரின் கற்றறிந்த மூத்த வழக்கறிஞரின் வாதங்களின் இடமாகும், " என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
"ஒரு வழக்கை விசாரித்து முடிவெடுக்கும்போது, இயற்கை நீதியின் கொள்கைகளை மனதில் கொண்டு, இரு தரப்பினரையும் நியாயமாக விசாரிக்க நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது" என்று உயர் நீதிமன்றம் கூறியது.
“இந்த வழக்கை தீர்மானிக்க அமலாக்க இயக்குநரகத்தின் பதில் அவசியமானது மற்றும் முக்கியமானது" என்று கூறிய நீதிமன்றம், ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் அமலாக்க இயக்குநரகம் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரத்தின் அடுத்த விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும்.