கொழும்பு துறைமுகத் திட்டங்களுக்காக துறைமுக நகர மணலை சட்டவிரோதமாக சீன ஒப்பந்தக்காரர் பெற்றதாகக் குற்றச்சாட்டு
கான்கிரீட் பணிகள் தொடர்பாக தேவையான தரங்களைச் சீனர்கள் பூர்த்தி செய்தார்களா என்பது குறித்தும் அரசாங்கம் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளதாக ஜாகொட கூறினார்.
கொழும்புத் துறைமுகத்தில் கிழக்கு மற்றும் ஜெயா கொள்கலனை நிர்மாணிப்பதற்காகத் துறைமுக நகரத் திட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக மணலை பெறுவதற்குச் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு விக்கிரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கம் அனுமதி வழங்கியதாக முன்னிலை சோசலிச கட்சியின் (எப்எஸ்பி) பேச்சாளர் புபுது ஜாகொட குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் பேச்சாளர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜாகொட, ஒப்பந்தத்தின் பிரகாரம் முத்துராஜவெல பிரதேசத்தில் இருந்து மணல் கொண்டுவரப்படவிருந்த போதிலும், இரண்டு திட்டங்களுக்குமான ஒப்பந்தக்காரர்கள் - சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி- துறைமுக நகரத் திட்டத்தில் இருந்து மணலைப் பெற்றுக்கொண்டதாக கூறினார்.
மாதாந்த அடிப்படையில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 4,000 கனச் சதுர மணல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாகவும், அரசாங்கம் வேறு பக்கம் பார்ப்பதாகவும் ஜாகொட கூறினார்.
இதுபோன்ற பெரிய அளவிலான கட்டுமானங்களுக்குக் கடல் மணலின் பொருத்தப்பாடு குறித்தும், கான்கிரீட் பணிகள் தொடர்பாக தேவையான தரங்களைச் சீனர்கள் பூர்த்தி செய்தார்களா என்பது குறித்தும் அரசாங்கம் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளதாக ஜாகொட கூறினார்.
சீனர்கள் கொள்வனவு செய்த பாரிய கடல் மணலுக்கு வரி செலுத்தப்பட்டதா என்றும் ஜாகொட கேட்டார். சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி இங்குத் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் சிறிலங்காவின் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.