கச்சத்தீவு விவகாரத்தில் 'என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
பாஜக ஆட்சிக்கு வந்தபோது, கட்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ன சொன்னது? கட்சத்தீவை மீட்க வேண்டுமானால் நாங்கள் சிறிலங்காவுடன் போரில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கூறினர்
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் சிறிலங்காவிடம் இருந்து கட்சத்தீவை மீட்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கட்சத்தீவு தீவைச் சிறிலங்காவுக்குத் தாரை வார்த்ததாகவும், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஒரு நாள் கழித்து, “புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளன என்றும், மு.க.ஸ்டாலின் கட்சி தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை" என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த திமுக தலைவர், பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதாகவும், தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரியதாகவும் கூறினார். பிரதமர் மோடி சிறிலங்கா நாட்டின் அரசத் தலைவரை சந்தித்தபோது இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தபோது, கட்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ன சொன்னது? கட்சத்தீவை மீட்க வேண்டுமானால் நாங்கள் சிறிலங்காவுடன் போரில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கூறினர். கடந்த 10 ஆண்டுகளில் மோடி எத்தனை முறை சிறிலங்கா சென்றுள்ளார்? கட்சத்தீவை எங்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று அவர் எப்போதாவது அவர்களிடம் கேட்டதுண்டா? அவர் சிறிலங்கா நாட்டின்அரசத் தலைவரை சந்தித்தபோது, கட்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்று சொன்னாரா? அப்போதெல்லாம் அவர் கட்சத்தீவு பற்றி குறிப்பிடவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.
"நேரு மற்றும் இந்திரா காந்தி காலத்தில் நடந்த நிகழ்வுகளை மிகத் தெளிவாக நினைவில் வைத்திருக்கும் பிரதமர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏதாவது நினைவிருக்கிறதா என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது, நான் பல கோரிக்கைகளை முன்வைத்தேன், நான் வைத்த முதல் கோரிக்கைகளில் ஒன்று கட்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என்பதுதான். இது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் கொடுத்த கோரிக்கை மனுவையும் படித்தீர்களா?" என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சத்தீவு விவகாரத்தை கிளப்பியது இப்போது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். "இந்த விவகாரம் அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அவர்கள் தங்கள் கைகளை தேன் கூட்டின் மீது வைத்தனர், இப்போது அவர்கள் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள், "என்று அவர் கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு பதிலில், கட்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், தேர்தல் காரணமாக கட்சி இந்த விஷயத்தை கொண்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
இப்போது கட்சத்தீவை நினைத்து அழும் பிரதமர், இந்திய மீனவர்களைத் துன்புறுத்தி தாக்கியதற்காகச் சிறிலங்காவைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசியது உண்டா? என்று கேள்வி கேட்டார்.