மீண்டும் பரபரப்பாகியிருக்கும் சரத்குமார்
ஹொலிவுட் திரைப்படங்களில் நடிப்பேன். விரைவில் தமிழ் திரைப்படங்களுக்கும் ஓஸ்கர் விருது கிடைக்கும். 2024 ஆம் ஆண்டில் சினிமாவைப் போல் அரசியலிலும் விஸ்வரூபம் எடுப்பேன்'' என நடிகர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
'வாரிசு', 'ருத்ரன்', 'பொன்னியின் செல்வன்' என பிரம்மாண்டமான பட்ஜட் படங்களில் நடித்து, புது தலைமுறை சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார் மூத்த நடிகர் சரத்குமார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில்,
'' தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.
எமக்கு பொருத்தமான கதாபாத்திரங்களைத் தெரிவு செய்து நடித்து வருகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்ததில் மனநிறைவு இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி தனித் தனியாக முழு நீள திரைப்படத்தை உருவாக்க இயலும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்களுக்கு ஓஸ்கர் விருது கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தேன். இன்று அது சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் நான் ஹொலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கலாம். தமிழ் திரைப்படங்கள் ஓஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள திறமையான நட்சத்திர நடிகைகளின் ராதிகா சரத்குமாரும் ஒருவர். அவருடைய கடும் உழைப்புக்குரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வருத்தம் எமக்கு இருக்கிறது. இருப்பினும் ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் நான் மூவரும் இணைந்து அறிமுக இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் 'கிடா சண்டை' எனும் திரைப்படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
திரையுலகை போல் அரசியலிலும் ஈடுபட்டிருக்கும் நான், 2024 ஆம் ஆண்டில் மீண்டெழுவேன். இதற்கான திட்டமிடல் தற்போது தொடங்கி விட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஆறு மாதங்களில் வெளியாகும். '' என்றார்.