88 பேரின் சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கம்
பொலிஸாரின் தகவலின்படி, தற்போது வரை குறைந்தது 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் சில தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 88 பேரின் சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.
சொத்துக்கள் முடக்கப்பட்டவர்களில் 26 பேர் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் மீதமுள்ளவர்கள் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
முடக்கப்பட்ட சொத்துக்களில் நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை அடங்குகின்றன. சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பதை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரை சுமார் 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மே மாதம் அரசாங்கம் வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம், 15 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் 117 தனி நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, தற்போது வரை குறைந்தது 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் சில தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர்.
அண்மையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய பண மோசடி தடுப்புச் சட்டம், சட்ட அமலாக்கத்துறைகளுக்கு, சட்டவிரோத வருமானத்தைக் கைப்பற்ற மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றன.