நாணயநிதியத்திடம் காட்டிக்கொடுக்கிறது அநுர அரசு; துமிந்த நாகமுவ
இது இந்த அரசாங்கம் எதிர்பார்க்கும் புதிய திருத்தம் அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் தொழிலாளர் அமைச்சராக இருந்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்த நேரத்தில் ஒரு தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இந்த திருத்தமானது நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை சர்வதேச நாணய நிதியத்தின் நலன்களுக்குக் காட்டிக் கொடுப்பதற்கான முயற்சியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
நுகேகொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. இந்த திடீர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் அரசாங்கம் செய்யவிருக்கும் திருத்தத்தைப் பார்க்கும்போது, இது இந்த அரசாங்கம் எதிர்பார்க்கும் புதிய திருத்தம் அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் தொழிலாளர் அமைச்சராக இருந்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்த நேரத்தில் ஒரு தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இலங்கையில் முழு தொழிலாளர் சட்டத்தையும் தலைகீழாக மாற்றி, விதிகள் மற்றும் விதிமுறைகளை தளர்த்த அவரால் நடடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதற்கு சமூகத்தில் எழுந்த எதிர்ப்பினால் அந்த அரசாங்கத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியமைக்க முன்னர் இந்த சட்டத்தை எதிர்த்த அரசாங்கம் தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது.
அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை சர்வதேச நாணய நிதியத்தின் நலன்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாராகி வருகிறது. தொழிலாளர் சட்டத்தின் அரசியல் நோக்கம் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது. அதற்கு அப்பால், இந்தத் திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகளுடன் தொடர்புடையது.
2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி சாதாரண மக்களால் ஏற்படவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் தொழிலதிபர்களும் அரசியல் ஆட்சியும் அந்த நெருக்கடிக்குக் காரணம். நாட்டிற்குள் வர வேண்டிய பில்லியன் கணக்கான டொலர்களை அவர்கள் மோசடியாக வெளிநாடுகளில் வைத்திருந்தனர். செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான வரிகளை செலுத்துவதையும் அவர்கள் தவிர்த்துவிட்டனர்.
கோடிக்கணக்கான பெரிய அளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. இதுவே பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும். ஆனால் நாட்டு மக்கள் தங்கள் வரிகளை சரியான நேரத்தில் செலுத்தினர். அவர்கள் தங்கள் வேலைகளை முறையாகச் செய்தார்கள். அவ்வாறிருந்தும் மக்களின் வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை. மாறாக வாழ்க்கை செலவு மாத்திரமே அதிகரித்துச் செல்கிறது. இந்நிலையில் சாதாரண தொழிலாளர் வர்க்கத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இந்த புதிய சட்டமும் அமைந்துள்ளது என்றார்.