உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காக எம்மவர்களை நிறுத்துவோம்; தமிழரசுக்கட்சி
அனைத்துச் சபைகளிலும் மேயர், தலைவர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்குத் தமது வேட்பாளர்களை முன்மொழிவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்கும்போது நிர்வாகங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் சபைகளிலும் மேயர், தலைவர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்குத் தமது வேட்பாளர்களை முன்மொழிவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் 06-06-2025 அன்று இரவு 7.30 - 9.30 மணிவரை நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் வட, கிழக்கில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து, அதனடிப்படையில் ஏனைய கட்சிகளிடம் ஆதரவுகோரி பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.
அதன் ஓரங்கமாக சில சபைகளில் நிர்வாகங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் சில கட்சிகளுடன் இணக்கப்பாடுகளையும் எட்டியுள்ளது. இருப்பினும் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்குமாறுகோரி தமிழரசுக்கட்சியின் பதில் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலேயே, நிகழ்நிலை முறைமையிலான சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்தலுக்கு அப்பால், டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு பற்றிக்கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்ற போதிலும், அதுபற்றிய விபரங்களை வெளியிடுவதற்கு கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.