சிறிலங்காவில் ஏற்படக்கூடிய உலகளாவிய தாக்கங்களை நிவர்த்தி செய்ய 3 விசேட குழுக்கள் நியமனம்
பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக மூன்று விசேடக் குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஹமாஸ் அரசியல் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளடங்கலாக மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்படக்கூடிய அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு, சிறிலங்காவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக மூன்று விசேடக் குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்று, பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கான குழு மற்றும் ஏனைய இரண்டு குழுக்களினதும் முன்மொழிவுகளை மேற்பார்வை செய்வதற்காக உயர்மட்டக் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசேடக் குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் ஜனாதிபதி பதவி நிலை பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக, பொருளாதார தாக்கத்தை மதிப்பிடுவதற்கு பொறுப்பான குழுவில் பதவிநிலை பிரதானியும் தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோர் இந்தக் குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடுக்கப்பட வேண்டிய பூர்வாங்க நடவடிக்கைகளைத் தீர்மானிப்பது மற்றும் அவற்றின் கண்டுபிடிப்புகளை உயர்மட்டக் குழுவுக்கு அறிக்கையிடுவது இரண்டு குழுக்களுக்கும் பணிக்கப்பட்டுள்ளது. ஈரான் உட்பட மத்திய கிழக்கிலும் உலகளாவிய ரீதியிலும் வளர்ந்து வரும் நிலைமைகள் காரணமாகச் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் எந்தவொரு நேரடி அல்லது மறைமுக தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதே இதுவாகும்.
எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட இரண்டு குழுக்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். இந்தக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளை உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உடனடி முடிவுகளை எடுக்கும்.