'தி கேரளா ஸ்டோரி' ஒளிபரப்புக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு
தேர்தலின் போது கேரளாவை இழிவுபடுத்துவதற்கு நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
தூர்தர்ஷன் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்த முதல்வர், தூர்தர்ஷன் போன்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் சங் பரிவாரின் "கைப்பாவையாக" மாறக்கூடாது என்று கூறினார்.
கேரளாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திரையிடும் முடிவை தூர்தர்ஷன் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
தூர்தர்ஷன் போன்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் சங்பரிவாரின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின்படி செயல்படும் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. தூர்தர்ஷன் பாஜக வேட்பாளர்களுக்கு வகுப்புவாத பிரச்சாரம் செய்யும் நிறுவனம் அல்ல.
சங்பரிவார் பரப்பிய பொய்கள் மற்றும் வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கு ஏற்கெனவே பரவலான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேர்தலின் போது கேரளாவை இழிவுபடுத்துவதற்கு நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
"கேரளா பல்வேறு மதக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழும் பகுதி. கேரளாவை கிண்டல் செய்வதும், உலகத்தின் முன் உயர்ந்து நிற்கும் ஒரு மாநிலத்தில் மத பகைமையை வளர்ப்பதும் இந்தப் படத்தின் நோக்கம்" என்று பினராயி விஜயன் கூறினார்.
"இந்த படம் ஏப்ரல் 5 ஆம் தேதி (தூர்தர்ஷனில்) ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு முழு மாநிலத்தையும் அவமதிப்பதற்கு சமம். மதச்சார்பற்ற கேரளா வகுப்புவாத துருவமுனைப்புக்கான இதுபோன்ற அழிவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும்" என்று அவர் மேலும் கூறினார்.