பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீரர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துன்புறுத்தினார்: தில்லி காவல்துறை
பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவதற்கான வாதங்களை டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரித்து வந்தது.
இந்திய மல்யுத்தச் சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு எதிராக துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த பெண் மல்யுத்த வீரர்களின் "கண்ணியத்தைச் சிதைத்ததாகத்” தில்லி காவல்துறை சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆறு பெண்கள் மல்யுத்த வீரர்கள் தாக்கல் செய்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவதற்கான வாதங்களை டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரித்து வந்தது.
டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, இந்திய மல்யுத்தச் சம்மேளனத்தின் தலைவர் "அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும்" என்றும் மல்யுத்த வீரர்களின் "கண்ணியத்தைச் சிதைப்பதே அவரது நோக்கம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சரண் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான மூன்று வகையான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் எழுத்துப்பூர்வ புகார் மற்றும் 161 ( காவல்துறையினரால் சாட்சிகளின் விசாரணை) மற்றும் 164 ( ஒரு குற்றவியல் நடுவரால் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இரண்டு அறிக்கைகள் அடங்கும்.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க நீதிமன்றம் அதன் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்தியாவிற்கு வெளியே நடந்த வழக்குகளுக்கு CrPC இன் பிரிவு 188 இன் கீழ் அனுமதி தேவை என்று இந்திய மல்யுத்தச் சம்மேளனத்தின் தலைவரின் வழக்கறிஞர் கூறிய வாதத்தையும் அவர் எதிர்த்தார் .
அதுல் ஸ்ரீவஸ்தவா முந்தைய தீர்ப்பைக் குறிப்பிட்டு, அனைத்து குற்றங்களும் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி தேவைப்படும் என்று வாதிட்டார். தில்லி மற்றும் பிற இடங்களிலும் குற்றங்கள் நடந்ததால், அனுமதி தேவையில்லை என்றார்.