ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட்
2023 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், கடைசி லீக் போட்டி பரபரப்பான ஆட்டத்தை கண்டது. இந்த போட்டியில் குஜராத் அணி ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 197 ரன்கள் எடுத்துள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். 61 பந்துகளில் அவர் 101 ரன்களை குவித்தார்.
198 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த குஜாரத் அணியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 52 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியில் 19.1 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது குஜராத் அணி. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்சிபி அணியின் கனவு தகர்ந்தது.
போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், இந்த தொடரில் விராட் கோலியின் அபார ஆட்டத்தை ரசிகர்கள் அனைவரும் வெகுவான பாராட்டி வருகின்றனர். இதற்கு முந்தைய போட்டியிலும் விராட் கோலி சதமடித்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் ஆர்சிபி வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்துள்ளார்.