பெங்களூரு குண்டுவெடிப்பு சந்தேக குற்றவாளி பலமுறை உடை மாற்றிப் பேருந்தில் பயணம்
இரவு 9 மணியளவில் பெல்லாரி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மூன்றாவது காட்சிப் பதிவுக் கண்காணிப்புக் காணொலியில், சந்தேகக் குற்றவாளி தொப்பி அல்லது கண்ணாடி அணியவில்லை.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக குற்றவாளி குண்டுவெடிப்புக்குப் பிறகு தனது ஆடைகளையும் தோற்றத்தையும் பல முறை மாற்றியதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த மூன்று காட்சிப் பதிவுக் கண்காணிப்புக் (சி.சி.டி.வி) காணொலிகளில், சந்தேக குற்றவாளி மூன்று வெவ்வேறு ஆடைகளில் காணப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல் காணொலியில், மார்ச் 1 ஆம் தேதி காலை 11.45 மணியளவில் சந்தேகக் குற்றவாளிஒரு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுச் சாதனத்தை (ஐஇடி) வைக்கக் கஃபேக்குச் செல்வதைக் காட்டியது. இந்தக் காணொலியில், அவர் முழு கை சட்டை மற்றும் வெளிர் நிற போலோ தொப்பி, கண்ணாடி மற்றும் முகமூடி அணிந்திருப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதையடுத்து சந்தேக குற்றவாளி பேருந்தில் ஏறினார்.
பிற்பகல் 2.30 மணியளவில் அவர் மற்றொரு பேருந்தில் ஊதா நிற அரைக்கை டி-ஷர்ட் மற்றும் கருப்பு தொப்பி அணிந்திருந்தபோது மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் இன்னும் முகமூடி அணிந்திருந்தார், ஆனால் கண்ணாடி இல்லை.
இரவு 9 மணியளவில் பெல்லாரி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மூன்றாவது காட்சிப் பதிவுக் கண்காணிப்புக் காணொலியில், சந்தேகக் குற்றவாளி தொப்பி அல்லது கண்ணாடி அணியவில்லை.
குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் உள்ள சி.சி.டி.வி காட்சிகளின் பதிவுகள், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததைக் காட்டியது. இதனால் குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டது என்பதைக் குறிக்கிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்டவர் அவசரப்படுவதாகத் தெரியவில்லை, மாறாக அமைதியாகத் தெரிந்தார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.