இலங்கை தீவின் நிலைமைக்கு ஜே.வி.பியும் பங்காளி
சுதந்திரத்தின் பின்னர் கடந்த 76 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கோஷங்களை எழுப்பி பொய்யான வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து எவரும் தம்மை தற்காத்து கொள்ள முடியாது எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறிமாவோவை ஆதரித்த ரோஹன
பொய்யான அரசியல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டதில் ஜே.வி.பியினரும் பங்காளிகள்.ஜே.வி.பி வரலாற்றில் அரசாங்கங்களை அமைக்கவும் கவிழ்க்கவும் உதவிய கட்சி.
1970 ஆம் ஆண்டில் ரோஹன விஜேவீர, சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஆதரவளித்தார். சிறிமாவோ ஆட்சிக்கு வந்த பின்னர் 71 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
ஜே.வி.பியின் இந்த கிளர்ச்சி காரணமாக நாட்டின் பெருந்தொகையான இளைஞர்களின் உயிர்கள் அழிந்து போயின. முப்படைகளை சேர்ந்த பலர் உயிரிழந்தனர். நாட்டின் மத்திய தர வகுப்பு இல்லாமல் போனது.
இறுதியில் 1976 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் ஜே.வி.பியினர் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டனர்.
ஜே.ஆர் வெற்றிப்பெற்றால், ஜே.வி.பிக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்தை மாற்றி தமது கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது.
இந்த வாக்குறுதிக்கு அமைய அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹன விஜேவீரவை 1977 ஆம் ஜே.ஆர்.ஜெயவர்தன விடுதலை செய்தார்.
விடுதலை செய்த பின்னர் மீண்டும் 1983,84 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தால், தலைமறைவாகும் நிலைமையேற்பட்டது. தலைமறைவாகி, நாட்டின் வன்செயல்கள் மூலம் நாட்டை மீண்டும் அராஜக நிலைமைக்கு கொண்டு சென்றனர்.
ஜே.வி.பியினர் ரணசிங்க பிரேமதாசவுக்கும் உதவினர்
1987,88ஆம் ஆண்டுகளில் ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்கு வருவதற்கு ஜே.வி.பியினர் உதவியதாக சிலர் கூறுகின்றனர். அதனை என்னால் உறுதியாக கூறமுடியாது. அது சமூகத்தில் நிலவும் கருத்து மாத்திரமே.
எப்படியே இறுதியில் ரணசிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார். அவர் பதவிக்கு வந்து சிறிது காலத்தில் உயிரிழந்த பின்னர், டி.பி.விஜேதுங்க பதவிக்கு வந்தார்.
அவர் தடை செய்யப்பட்டிருந்த ஜே.வி.பியின் தடையை நீக்கினார். இதன் மூலம் அந்த கட்சிக்கு மீண்டும் ஜனநாயக அரசியலுக்குள் வர வழியை ஏற்படுத்திக்கொடுத்தார்.
1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜே.வி.பியுடன் இணைந்து பணியாற்றினார்.
அதன் பின்னர் வீடு வீடாக சென்று மகிந்த ராஜபக்ச மட்டுமே நாட்டில் இருக்கும் சிறந்த அரசியல்வாதி எனக்கூறினர் இதனால், மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு கேட்டனர்.
நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு சகல கட்சிகளும் பொறுப்பு
பிற்காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காகவும் ஜே.வி.பியினர் பணியாற்றினர். ஜே.வி.பியே சரத் பொன்சேகாவையும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியது.
அப்படியானால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் வலுவான அமைப்பாக இருந்துள்ளது.
நாடு வங்குரோத்து அடைத்தமைக்கு நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்றாலும் ஜே.வி.பியே இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய முதன்மையான கட்சி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே சகல அரசியல் விளையாட்டுக்களையும் நிறுத்தி விட்டு, நாட்டுக்கான தேசிய கொள்கையை உருவாக்கி, அந்த தேசிய கொள்கைகளை அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் ஏற்று முன்நோக்கி செல்வோம் என்று நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.