நீதிமன்ற அவமதிப்பு மனுவை நாகானந்த கொடித்துவக்கு திரும்பப் பெற்றார்
பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாக முடியும் என தெரிவித்த நீதிமன்றம், பிரதிவாதி ஓஷல ஹேரத் தரப்பில் முன்னிலையாக ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு திரும்பப் பெற்றுள்ளார்.
இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் டிசம்பர் 05 காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு, பிரதிவாதி ஓஷல ஹேரத் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில், மனுதாரர் தரப்பு அதற்கு ஆட்சேபனைகளை தெரிவித்ததுடன், வழக்கு அறிவிக்கை வழங்குவதற்கு முன்னர், பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாக முடியும் என தெரிவித்த நீதிமன்றம், பிரதிவாதி ஓஷல ஹேரத் தரப்பில் முன்னிலையாக ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பின்னர், மனுதாரர் சம்பந்தப்பட்ட மனுவில் திருத்தங்களைச் செய்ய அனுமதி கோரினார். ஆனால் பிரதிவாதி கோரிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார். அதனையடுத்து, இந்த மனுவை மீளப்பெற அனுமதிக்குமாறும், புதிய மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான உரிமையை நாகானந்த கொடித்துவக்கு நீதிமன்றில் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்துத் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.