எண்ணெய் பனை சாகுபடி தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆசிய பாமாயில் சங்கம் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை
ஆசிய பாமாயில் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், இந்த கொள்கை முடிவுகளின் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கம் குறித்து கவலை தெரிவித்தது.
ஆசிய பாமாயில் சங்கம் சிறிலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்து, எண்ணெய் பனை சாகுபடிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்தரப்பு அமைப்பான ஆசிய பாமாயில் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், இந்த கொள்கை முடிவுகளின் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கம் குறித்து கவலை தெரிவித்தது.
"சிறிலங்காவில் எண்ணெய் பனை சாகுபடியானது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், இறக்குமதியைக் குறைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை ஆதரிப்பதற்கும் விதிவிலக்கான, வெற்றி-வெற்றி வாய்ப்பை அளிக்கிறது" என்று ஆசிய பாமாயில் சங்கம் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஆசிய பாமாயில் சங்கமும் அதன் உறுப்பினர்களும் உள்ளூர் பங்குதாரர்களுடன் ஒத்துழைக்கவும், அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிறிலங்காவில் நிலையான பனை எண்ணெய் தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளனர்.
அவ்வாறு செய்வதன் மூலம், சிறிலங்கா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிக்கவும் முடியும். பொறுப்பான சுற்றுச்சூழல் நடைமுறைகள் மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இது செய்யப்படும் என்று ஆசிய பாமாயில் சங்கம் உறுதி செய்துள்ளது.
"எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், தாவர எண்ணெய்களில் தன்னிறைவை அடைவதற்கும் அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் குறைப்பதற்கும் நாட்டில் 250,000 மெட்ரிக் டன் பாமாயிலை உற்பத்தி செய்யும் நோக்குடன் பாமாயில் பணியை வடிவமைப்பதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்" ஆசிய பாமாயில் சங்கம் தெரிவித்துள்ளது.