LPL இல் தேசிய கீதத்தை தவறாக பாடிய உமாரா சிங்கவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உமாரா சிங்கவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் செய்தித் தளத்துக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
"தேசிய கீதம் ஒரு நாட்டின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும்.
எனவே அதனை எவராலும் திரிபுபடுத்த முடியாது .
பாடலை மீண்டும் உருவாக்கவோ அல்லது மற்ற இசையுடன் கலக்கவோ முடியாது.
இவ்விடயம் தொடர்பில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.
தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு நிலையான வழி உள்ளது. "என தெரிவித்தார்.
பிரபல பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தில் 'நமோ நமோ மாதா' பாடலுக்குப் பதிலாக 'நமோ நமோ மஹதா' பாடியதைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைப் பற்றி அதிகம் பேசப்பட்டு, " "Mahatha" எனும் ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.