ஆந்திராவில் பழங்குடியினரை அடித்து முகத்தில் சிறுநீர் கழித்த 6 பேர் கைது
இந்த குற்றத்தின் காணொலி, தாக்கப்பட்டவர்களில் ஒருவரால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. இது ஊடகங்களில் பரவியது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் 26 வயது பழங்குடியின இளைஞரை அடித்து முகத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறி மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூன் 19 ஆம் தேதி ஓங்கோல் நகரத்தில் உள்ள முக்திநுதலபாடு சாலையில் இந்த சம்பவம் நடந்தது. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்புதான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த குற்றத்தின் காணொலி, தாக்கப்பட்டவர்களில் ஒருவரால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. இது ஊடகங்களில் பரவியது.
“மொத்தம், ஒன்பது பேர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளோம். மேலும் மூவர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஓங்கோல் காவல் நிலையத்தில் SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். பிரகாசம் காவல் கண்காணிப்பாளர் மல்லிகா கார்க் கூறினார்.