ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை சுயாதீன பன்னாட்டுக் குழு விசாரிக்க வேண்டும்: கர்தினால் ரஞ்சித்
வெளிப்படையான மற்றும் பரந்த விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்து சுதந்திரமான, பக்கச்சார்பற்ற, நீதியான, வெளிப்படையான மற்றும் பரந்த விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (செப். 06) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் அரசியல் செல்வாக்கின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் தெரிவித்தார்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழு அறிக்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தினார்.