கட்சத்தீவு, மீனவர்கள் பேச்சுவார்த்தையை தவிர்த்த பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்
சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவோ அல்லது கட்சத்தீவை மீட்பதற்கோ எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை பிரதமர் மோடியும், மத்திய அரசும் புறக்கணித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் அண்மையில் இலங்கை சென்றிருந்த போதிலும், சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவோ அல்லது கட்சத்தீவை மீட்பதற்கோ எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
தமிழகச் சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கட்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. சிறிலங்காவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் விடுதலை குறித்தும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை. இது வருந்தத்தக்கது, ஏமாற்றமளிக்கிறது" என்றார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு மீனவர்களை கைவிட்டுவிட்டது என்று கூறிய அவர், ஆனால் திமுக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறாது என்று உறுதியளித்தார்.