உலக அரசாங்க உச்சி மாநாடு 2025 இல் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியம் பயணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 2025 பெப்ரவரி 10 – 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 'உலக அரசாங்க உச்சி மாநாடு 2025' இல் உரையாற்றுவார் என்றும், பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்றும் சிறிலங்காவின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுகளுடன் அவர் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். சிறிலங்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் அவர் ஈடுபடுவார் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான பயணம் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.