ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16 இல் ஆரம்பம்
இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.
அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவிருப்பதுடன், புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படும்.