தமிழக அகதிகள் தொடர்பில் அரசுடன் இந்திய உயர்ஸ்தானிகர் பேச்சு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு 07-06-2025 அன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளை செய்துகொடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடியிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு 07-06-2025 அன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்திலுள்ள அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.
அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10,000 இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார். அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை அரசாங்கம் செய்துகொடுக்கவேண்டும் எனவும், இதுபற்றி அரசாங்கத்துடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்