சுற்றுச்சூழலை அழித்த அரசியல் சகாப்தம் முடிவு ; உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்' முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி 'முளைப்பதற்கு இடமளிப்போம்' என்ற தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினம் உலகளாவிய ரீதியில் 05-06-2025 அன்று கொண்டாடப்பட்டது.

எமது நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்த துயரத்திற்கு இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாக அமைந்தன. அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். தற்போது அதிகாரிகள் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுற்றாடலை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான பொறுப்பும் எம் அனைவருக்கும் உள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்' முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி 'முளைப்பதற்கு இடமளிப்போம்' என்ற தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினம் உலகளாவிய ரீதியில் 05-06-2025 அன்று கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உலக சுற்றாடல் தினம் கேகாலையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இன்று மிக முக்கியமான நாள். நான் ஏராளமான கூட்டங்களில் உரையாற்றியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் இன்று நான் வெறும் உரையை மாத்திரம் நிகழ்த்த போவதில்லை. இந்த உரை எமது தாய்நாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மீதான எமக்குள்ள பிணைப்பு மற்றும் பொறுப்பு பற்றியதாகும்.
மேலும் இந்த நிகழ்வு வெறுமனே ஒரு நிகழ்வு மாத்திரமல்ல. சுற்றுச்சூழல் மீதான எமது பிணைப்பு, உணர்வு மற்றும் பொறுப்பு என நான் நம்புகிறேன். எமது நாடு தொடர்பில் புராதன காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களிலும் நவீன காலங்களில் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும் போதும் '' Beautiful Sri Lanka'' என்ற வார்த்தையை கூறுவார்கள்.
எனினும் இந்த அழகின் அடியில் மிகவும் ஆழமான பேரவலம் உள்ளது. சிறுவயதில் எமது நாடு மண்சரிவு வெள்ளம் அற்ற நாடாக இருந்தது. ஆனால் இன்று இந்த அனர்த்தங்களை காண்கிறோம். அந்த உரிமைகளோடு பிறந்த நாம் வெள்ளம் மற்றும் வரட்சியினால் ஏற்பட்ட அழிவுகளை சந்திக்கிறோம்.
அடுத்ததாக யானை மனித மோதல் உள்ளது.வருடத்தில் 173 பேர் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வருடத்தில் 450 இற்கும் மேற்பட்ட யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இதனை பார்க்கும் போது ஒரு மனிதன் கொல்லப்படும் போது 3யானைகளை இழக்க நேரிட்டுள்ளது.மிக சிறந்த பல்வகை கொண்ட நாடு எமக்கு கிடைத்துள்ள போதிலும் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் வாழும் உயிர்களுக்கு இடையில் பாரிய மோதல் காணப்படுகிறது.
எனவே எமக்கு இந்த சுற்றுச்சூழல் தொடர்பில் கைவிட முடியாத பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த நாட்டில் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும். இந்த அனர்த்தங்கள் இவ்வாறே தொடர்ந்தால் எமது எதிர்கால சந்ததியினருக்கு பேரவலத்தையே நாம் விட்டுச் செல்வோம்.
நாட்டு மக்களாக இந்த சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதே எமக்குள்ள பொறுப்பாகும். இந்த கட்டமைப்புக்கு பின்னால் ஏராளமான வலுவான சட்டங்கள் உள்ளன.மேலும் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பை வழங்கவும் மிகவும் நேர்த்தியான அரச கட்டமைப்பு உள்ளது. எனினும் அவை இவ்வளவு காலமும் இயங்கியதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது.
முதலாவதாக இந்த பேரழிவுக்கு பின்னால் அரசியல் அதிகாரம் உள்ளது. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான பிரதேசங்களில் மணல் திட்டுக்கள் அரசியல்வாதிகள் அல்லது அரசியல்வாதிக்கு நெருக்கமான ஒருவருக்குச் சொந்தமானவை. இந்த நிலைமையை நீங்கள் என்னை விட நன்றாக அறிவீர்கள்.எமது காடுகளை அழித்ததன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். இதன் பின்னால் அரசியல் பாதுகாப்பும் அரசியல் அரவணைப்பும் உள்ளது.
எமது நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்த துயரத்திற்கு இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாக அமைந்தன. அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். அதன்படி தற்போது அதிகாரிகள் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.எனவே அரச அதிகாரிகள் உயிரைக் கொல்லும் பங்களாராக இருக்கக்கூடாது. உயிரைக் கொடுக்கும் பங்களராக மாற வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் ஒத்துழைப்பை நாம் வழங்குகிறோம். எனினும் இங்கு அரசியல் அதிகாரம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும் பழைய அதிகாரத்துவ பொறிமுறையின் சில பகுதிகள் இன்னும் அந்த பழைமை வாதத்திலிருந்து விடுபடத் தவறிவிட்டன.எனவே அந்த பழைமை வாதத்தை கைவிட்டு புதிததாக மாற வேண்டிய நேரம் ஆரம்பித்து விட்டது. எனவே நான் மீண்டும் கூறகிறேன்.மாறுங்கள் அல்லது நாம் மாற்றுவோம் என்றார்.