வடக்கு அரசியலில் திருப்பம்; ஈ.பி.டி.பி.யிடம் ஆதரவு கோரியது தமிழரசுக்கட்சி
வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் 05-06-2025 அன்று சந்தித்துக் கலந்துரையாடின.

வடக்கிலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி மட்டத்தில் ஆராய்ந்து, வெகுவிரைவில் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் 05-06-2025 அன்று சந்தித்துக் கலந்துரையாடின.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்றிருந்தனர். இச்சந்திப்பின்போது வடக்கில் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டது.
அதன்படி வடக்கிலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மை ஆசனங்கள் இன்மையால் அம்மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்குமா என டக்ளஸ் தேவானந்தாவிடம் சி.வி.கே.சிவஞானம் வினவினார்.
அதற்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, இதுபற்றி தமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாகத் தெரிவித்தார். அதன்படி அறிவிக்கப்படும் தீர்மானம் சாதகமானதாக அமையும் என தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா, 'வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் எமது கட்சி ஆசனங்களை பெற்றிருக்கின்றது. எனவே அந்த உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எமது ஆதரவை வழங்குமாறு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் என்னிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த நான், பக்கச்சார்பற்ற, மக்கள் நலன் சார்ந்த எமது கொள்கையின் பிரகாரம் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வெகுவிரைவில் தீர்மானத்தை அறிவிப்பதாகக் குறிப்பிட்டேன்' என்றார்.