யுத்தகால தங்க நகைகளை உரித்துக்களை காண்பித்து பெறலாம்; அரசாங்கம் அறிவிப்பு
“யுத்தக் காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக பொலிஸ் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தங்க நகைகள் யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் உரியவர்களுக்கு நகைகள் வழங்கப்படும். ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் அந்த நகைகளின் ஒரு தொகைகள் வடக்கு பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.இதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 05-06-2025 அன்று நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் “யுத்தக் காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக பொலிஸ் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தங்க நகைகள் யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். யுத்த கால சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நகைகளுக்கான உரித்தை உறுதிப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் காணப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொதுமக்களால் உரித்தை உறுதிப்படுத்த முடியாத தங்க நகைகளை வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்தும் வகையில் பொது நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளோம்.
வடக்கு அபிவிருத்திக்கு இந்த தங்க நகைகளின் ஒரு தொகையையும், அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பளிக்கப்படும்” என்றார்.