வாயில் கதவை உடைத்து ஹரித்வார் நீதிமன்றத்துக்குள் புகுந்த காட்டு யானை
150 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரதான வாயிலை உடைத்து யானை எதிர்பாராத வகையில் உள்ளே நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹரித்துவாரில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் காட்டு யானை புதன்கிழமை நுழைந்ததால், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பீதியடைந்தனர்.
மாலை 4.45 மணியளவில், ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. மூத்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெறும் 150 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரதான வாயிலை உடைத்து யானை எதிர்பாராத வகையில் உள்ளே நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வளாகத்திற்குள் இருந்த சுவரையும் யானை சேதப்படுத்தியது. சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வாகனங்கள் இருந்தபோதிலும், சம்பவத்தின் போது சேதம் அல்லது மக்களுக்குக் காயம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த யானை அருகில் உள்ள ராஜாஜி தேசிய பூங்காவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.