2024 ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வன்முறை பதிவாகாத மிகவும் அமைதியான தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு
பல முக்கிய மாவட்டங்களில் 75 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் என்று வர்ணித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க, தேர்தல் செயல்முறை குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாக இருந்ததாகவும், வாக்களிப்பு காலத்தில் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் நேற்று (21) மாலை ஊடகங்களுக்கு விசேட கூற்றொன்றை வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
பல முக்கிய மாவட்டங்களில் 75 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றது.
1,713 நியமிக்கப்பட்ட வாக்கெண்ணல் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், முடிவுகள் எதிர்வரும் மணித்தியாலங்களில் வினைத்திறனாக செயல்முறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ரத்நாயக்க அறிவித்தார்.