ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உள்ளக விசாரணைகள் ஆரம்பம் ; நீதி அமைச்சர் அறிவிப்பு
இத்தகைய நியமங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில் தற்போது குறித்தவொரு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்துள்ளவர்களின் பட்டிலில் முறைகேடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தில் எச்.சி 692018 இலக்க வழக்கில் 2025.05.02 ஆம் திகதியன்று தண்டனைச் சட்டக்கோவை 386 பிரிவின் பிரகாரம் அதுல சேனாரத்ன என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருக்கு 2025.05.12 ஆம் திகதி வெசாக் தினத்தன்று ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் நீதியமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
இத்தகைய நியமங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில் தற்போது குறித்தவொரு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக நாம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இதனைவிடவும் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஜனாதிபதி செயலகமும் முறைப்பாடு செய்துள்ளது. ஆகவே விரைவில் ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்துவோம் என்றார்.