ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் முக்கிய கோரிக்கை
முள்ளிவாய்க்காலுக்கான விஜயமானது மக்களின் வலிமிகு துயரம் ஏற்கப்படுவதைக் காண்பிக்கக்கூடிய வலுவான செயலாக அமைவதுடன் மாத்திரமன்றி, உண்மையை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ர் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தாம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக வருகைதரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
அதேவேளை நாட்டுக்கு வருகைதரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.
அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும், அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும்.
பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர். ஆனால் எமது வயோதிபம் மற்றும் உணர்வு ரீதியான சோர்வுக்கு மத்தியிலும் நாம் நீதியைக்கோரி அமைதியான முறையில் போராடிவருகின்றோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் ஜெனீவாவுக்குச்சென்று உரையாற்றியிருப்பதுடன், எமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு விளக்கமளித்துவந்திருக்கின்றோம். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது.
அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் நீங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதனை நாமறிவோம். இருப்பினும் உங்களது இவ்விஜயம் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடருக்கு மத்தியில் இடம்பெறவிருப்பதனால், அது எம்மத்தியில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
குறிப்பாக ஜெனீவாவில் உங்களைச் சந்திப்பதற்கு நாம் பல தடவைகள் முயற்சித்த போதிலும், அது சாத்தியமாகாத நிலையிலேயே இவ்விஜயம் தொடர்பான எமது கரிசனைகள் வலுப்பெற்றிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் உங்களது இலங்கை விஜயத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு இடமளிக்குமாறு கோருகின்றோம். நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, நாட்டில் இருப்பதன் ஊடாக உங்களை நேரடியாகச் சந்தித்துப் பேசமுடியும் எனக் கருதுகின்றோம்.
அவ்வாறானதொரு சந்திப்பு நாங்கள் முகங்கொடுத்துவரும் யதார்த்த சூழ்நிலையையும், எமது வலிகளையும் உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
முள்ளிவாய்க்காலுக்கான விஜயமானது மக்களின் வலிமிகு துயரம் ஏற்கப்படுவதைக் காண்பிக்கக்கூடிய வலுவான செயலாக அமைவதுடன் மாத்திரமன்றி, உண்மையை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும்.
அது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் நீதியை அடைந்துகொள்வதை நோக்கிய அர்த்தமுள்ள நடவடிக்கையாகவும் அமையும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.