ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட கோரிக்கை
விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படாத கைதிகள், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகப் பொய்யாகக்கூறி விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் விடுவிக்கப்பட்ட சம்பவமானது அதனுடன் தொடர்புடைய கட்டமைப்பின் நேர்மைத்தன்மை தோல்வியடைந்திருப்பதைக் காண்பிப்பதுடன், எதிர்வருங்காலங்களிலும் இவ்வாறு உரிய செயன்முறைகள் பின்பற்றப்படாமல் இருக்கக்கூடும் என்ற கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.அத்துல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து, அதுகுறித்து குற்றவிசாரணைப்பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவ்விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படாத கைதிகள், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகப் பொய்யாகக்கூறி விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சத்துர கல்ஹென ஆகியோரால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதியொருவர் முறையான சட்ட செயன்முறைகள் பின்பற்றப்படாமல், ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.
அரசியலமைப்பின் 34 ஆம் பிரிவு தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அதிகாரமளிக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் அந்த அதிகாரம் வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையிலும், உரியவாறான செயன்முறைகளின் பிரகாரமும், சட்டத்துக்கு அமைவாகவும் பயன்படுத்தப்படவேண்டும்.
ஹிருணிகா பிரேமசந்திர எதிர் சட்டமா அதிபர் வழக்கில் உரிய செயன்முறைகள் மீறப்படும் பட்சத்தில் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்ற மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய சம்பவமானது அரச கட்டமைப்புக்கள் முறையாக இயங்காதிருப்பதற்கான சாத்தியப்பாடு, நிர்வாக அதிகாரத் துஷ்பிரயோகம், சிறைச்சாலைக் கட்டமைப்பின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மீறப்படல் என்பன தொடர்பில் பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ஜனாதிபதியினால் அத்தகையதொரு பொதுமன்னிப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது உரிய கட்டமைப்பின் செயன்முறைசார் நேர்மைத்தன்மையின் தோல்வியைக் காண்பிப்பதுடன், எதிர்வருங்காலங்களில் உரிய செயன்முறை பின்பற்றப்படாமல் இருக்கக்கூடும் எனும் அச்சுறுத்தலையும் தோற்றுவித்துள்ளது.
எந்தவொரு விதிவிலக்குமின்றி சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படவேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளையும், நீதிமன்றத்தீர்ப்பையும் அவமதிக்கக்கூடியவாறு சட்டத்துக்கு முரணாகவும், தன்னிச்சையான விதத்திலும் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்படக்கூடாது.
எனவே இச்சம்பவம் தொடர்பில் முழுமையானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினரைக் கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்குமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுங்கள். அத்தோடு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்ததும், வெளிப்படைத்தன்மையுடன்கூடியதுமான செயற்பாடுகளை வலுப்படுத்துங்கள் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.