கைதான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு இன்று வரை விளக்கமறியல்
சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்.

சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டு, தனது சொந்த நிலைப்பாட்டில் குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுவித்தமை தொடர்பில், பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
2025 வெசாக் பூரணை தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன எனும் குற்றவாளி விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் இரவு, சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணை பிரிவு இலக்கம் 1 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, பொலிஸ் பரிசோதகர் தில்ஷான் உள்ளிட்ட குழுவினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்ற விசாரணை பிரிவு இலக்கம் 1 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, பொலிஸ் பரிசோதகர் தில்ஷான் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக ஆகியோருடன் முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் ஆஜராகி விடயங்களை முன் வைத்தார்.