தமிழ் மக்கள் கூட்டணி - தமிழரசுக்கட்சி ஒப்பந்தத்தில் கைச்சாத்து
'இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தை மாத்திரமே கட்டுப்படுத்தும். வேறு பிரதேச சபைகளில் உடன்பாடு எட்டப்படின், அதற்கு வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்' எனவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையை தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக்கட்சியும் இணைந்து ஆட்சி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றைய தினம் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.
வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களில் தமக்குப் பெரும்பான்மை கிட்டாத சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுடன் ஒன்று பேச்சுவார்த்தை நடாத்திவருகின்றன.
அதன்படி நல்லுர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 7 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி 6 ஆசனங்களையும் பெற்றிருக்கும் நிலையில், அச்சபையில் அவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2025-06-12 அன்று கொழும்பிலுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் வைத்து தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் மேற்படி இணக்கப்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் தவச்செல்வன் சிற்பரனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி என்பன இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதுடன் அதற்கமைய முதல் இரண்டு வருடங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கும், அக்காலப்பகுதியில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதேபோன்று அடுத்த இரண்டு வருடங்களுக்கு (3 ஆம், 4 ஆம் ஆண்டுகள்) தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கும், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும் 'இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தை மாத்திரமே கட்டுப்படுத்தும். வேறு பிரதேச சபைகளில் உடன்பாடு எட்டப்படின், அதற்கு வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்' எனவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், உள்ளுராட்சிமன்றங்களின் ஊடாக மக்களுக்கான சேவை உரியவாறு சென்றுசேரவேண்டும் எனவும், அதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தாம் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறாத சபைகளில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணைந்து ஆட்சியமைப்பதற்கான உடன்பாட்டை எட்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அதன் நீட்சியாகவே தற்போது தமிழ் மக்கள் கூட்டணியுடனும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், மாகாணசபைத்தேர்தல் உள்ளடங்கலாக எதிர்வருங்காலங்களில் இணைந்து பயணிப்பது குறித்து அந்தந்த சந்தர்ப்பங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி தம்மை விட அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பதாகவும், எனவே அங்கு அவர்கள் ஆட்சியமைப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த சுமந்திரன், அதேபோன்று நல்லூர் பிரதேச சபைக்கு அப்பால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாத ஏனைய சபைகளிலும் தமிழ் மக்கள் கூட்டணி தமக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.