உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மன் செல்கிறார் ஜனாதிபதி அநுர
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையிலான வர்த்தகம்,டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து ஜேர்மன் ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மாற்றம், கிடைக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள்,நாட்டின் வளர்ச்சி திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த, ஜேர்மனியில் உள்ள முக்கிய தொழில்களுடன், ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி திசாநாயக்க தலைமை தாங்குவார்.
மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்வார்கள்.