பொதுமன்னிப்பளிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் ; அஜித்.பி பெரேரா
வெசாக் தினத்தன்று சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைது ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் உண்மையானது என்று நம்பிக்கை கொள்ள முடியாது. வெசாக் பண்டிகையின் போது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிப்பதற்கு ஜனாதிபதியால் அனுமதிக்கப்பட்ட 388 கைதிகளின் பெயர் விபரங்களை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா தெரிவித்தார்.
களுத்துறை 10-06-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறைச்சாலை கட்டமைப்பின் ஊழல் மோசடி தற்போது வெளியாகியுள்ளது. வெசாக் தினத்தன்று சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைது ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தேன்.அதுவரையில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் சிறைச்சாலை தலைமையகம், நீதியமைச்சு , ஜனாதிபதி செயலகம் ஆகிய அரச நிறுவனங்கள் தொடர்புடையது. பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ள கைதிகளின் பெயர் விபரங்களை சிறைச்சாலை தலைமையகம் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கும். நீதியமைச்சால் அந்த பெயர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜனாதிபதி செயலத்தால் இறுதிப்படுத்தப்பட்ட வகையில் அனுப்பி வைக்கப்படும் பெயர் பட்டியலுக்கு அமைவாகவே சிறைச்சாலை தலைமையகம் பொதுமன்னிப்பு வழங்கலை செயற்படுத்தும். இவ்வாறான நிலையில் கடந்த வெசாக் தினத்தன்று சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.
பொது மன்னிப்பு வழங்கல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை. சட்டத்தின் பிரகாரமே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது என்று சிறைச்சாலை தலைமையகம் கடந்த வாரம் ஊடக அறிக்கையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செயலகமும், பொலிஸ் திணைக்களமும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று அரச நிறுவனங்களும் பரஸ்பரமான முறையில் அறிக்கை வெளியிடுகின்றன. எந்த நிறுவனம் குறிப்பிடுவதை ஏற்பது.ஜனாதிபதி செயலகம் வெளியிடும் சகல அறிக்கைகளையும் உண்மை என்று நம்ப முடியாது.
பொதுமன்னிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்தால் இறுதிப்படுத்தப்பட்ட 388 கைதிகளின் பெயர் விபரங்களை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்த முறைகேட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதை ஆளும் தரப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.