உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிரணிகள் ஒன்றிணைவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிரதான எதிர்க்கட்சிகளுக்கிடையில் மாற்றுக் கொள்கை காணப்படுகின்றன. இந்த அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் அரசியல் உரிமைக்கு முரணாக செயற்படுகிறது.

உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய அரசியல் கட்சிளுடன் கொள்கை அடிப்படையில் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன.
மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு ஊடாக இடம்பெற வேண்டும் என்பதை உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளன. இரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை பொரள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தினர். இச்சந்தர்ப்பத்தில் போது அவர்கள் கூட்டாக இந்த தீர்மானத்தை அறிவித்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு முழுமையாக ஆணை வழங்கவில்லை. பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகவே மக்கள் வழங்கிய ஆணையை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
தனித்த பெரும்பான்மையை உறுதிப்படுத்தாத உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான கொள்கை அடிப்படையில் ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளோம். பொது இணக்கப்பாட்டுடன் ஒருசில உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளோம்.
எதிர்கட்சிகள் அனைத்தும் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதால் பொதுவான கொள்கைக்கு அமைவாகவே உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். பொது கொள்கைக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தங்கள் ஊடாக இந்த கூட்டிணைவு ஏற்படுத்தப்படவில்லை.பொதுக்கொள்கை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேயர்,மற்றும் பிரதி மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான தெரிவு பகிரங்கமான முறையில் இடம்பெற வேண்டும்.இரகசிய வாக்கெடுப்பில் தெரிவு இடம்பெற கூடாது என்பதை உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். கொழும்பு மாநாகர சபைகளில் நிச்சயம் நாங்கள் ஆட்சியமைப்போம் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிரதான எதிர்க்கட்சிகளுக்கிடையில் மாற்றுக் கொள்கை காணப்படுகின்றன. இந்த அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் அரசியல் உரிமைக்கு முரணாக செயற்படுகிறது.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள ஆணையை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருப்பாhல் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். அரசாங்கத்துக்கு எதிரான சகல சக்திகளையும் ஒன்றிணைப்போம்.இது நீண்டதூர பயணத்துக்கான ஆரம்பமல்ல என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, பிரதான எதிர்க்கட்சிகள் தற்போதைய நிலையில் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கத்தக்கது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி பலமான ஆட்சியை உருவாக்கலாம் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரான லசந்த அழகியவண்ண, எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு மதிக்கத்தக்கது. காலம் கடந்த ஞானம் என்றும் குறிப்பிடலாம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாக்க கொண்டு உள்ளுராட்சிமன்றங்களின் ஆட்சியமைப்பதற்கு முழுமையான ஆட்சியமைப்போம். பொது இணக்கப்பாட்டுடன் ஸ்தாபிக்கப்படும் உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகள் சிறந்த முறையில் செயற்படுவதை ஆராய்வதற்கு பொதுகொள்கையின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் குழு ஒன்று நியமிக்கப்படும் என்றார்.