தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண கடையடைப்பு
.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் கவனயீப்பு பேரணி இடம்பெறவுள்ளதுடன், வடக்கு கிழக்கில் ஹர்த்தாலும் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு ,மல்லாவி, உடையார்கட்டு, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரங்களில் கடைகளை மூடி போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு இன்று போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதோடு, பாடசாலைகள் பலவும் மாணவர்கள் வரவின்மை காரணமாக இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.