மனிதர்களுக்கு எதிரியா ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்?

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்பங்கள் குறித்து அடிப்படையான விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர்களும் கூட சமீப காலமாக அதிகம் விவாதித்து வரும் விஷயங்களில் ஒன்று ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ். அதாவது ஏஐ எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு ஆகும். குறிப்பாக, மிக சமீபத்தில் பல தரப்பட்ட தகவல்களை அள்ளிக் கொட்டும், பல வேலைகளை நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்கும் சாட்ஜிபிடி என்ற ஏஐ தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதேபோல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிங், கூகுள் நிறுவனத்தின் பார்டு போன்ற ஏஐ தொழில்நுட்பங்கள் பல திறன்களை உள்ளடக்கியதாக உள்ளன. இத்தனைக்கும் ஏஐ தொழில்நுட்பம் என்பது புதுமையான விஷயம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இதை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில நிறுவனங்கள் பலன் அடைய தொடங்கியிருக்கின்றன. சில நிறுவனங்கள் அதற்கான நடைமுறைகளை கையாண்டு வருகிறது.
அவ்வளவு ஏன்? ஒவ்வொரு தனிநபரும் கூட ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தை கையாளத் தொடங்கியிருக்கின்றனர் அல்லது தினம், தினம் அதுகுறித்து புதுப்புது தகவல்களை தேடிப் படித்து வருகின்றனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சாட்ஜிபிடி குறித்து கற்பித்ததன் மூலமாக கடந்த 3 மாதங்களில் ஒரு நபர் ரூ.28 லட்சம் சம்பாதித்துள்ளாராம்.
நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பதைப் போல ஒவ்வொரு விஷயத்திலும் சாதக, பாதகங்கள் அடங்கியிருக்கின்றன. அதன்படி ஏஐ தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதோ, அதேபோல சில ஆபத்துகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதிலும் சரியாக பயன்படுத்தாத சமயங்களில் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எச்சரிக்கும் ஜாம்பவான்கள் : ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து கூகுள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஓப்பன் ஏஐ நிறுவன முதன்மை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் போன்றவர்கள் அவ்வபோது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில், ஆல்ட்மன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோது, “என்னுடைய சொந்த தயாரிப்பு குறித்து எனக்கே கொஞ்சம் அச்சமாகத்தான் உள்ளது’’ என்றார். தவறான தகவல்களை பரப்பவும், சைபர் தாக்குதல்களை நடத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமோ என்று அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுந்தர் பிச்சை இதுகுறித்து கூறுகையில், ஏஐ தொழில்நுட்பத்தை தாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார். மனித மூளையே எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார் அவர். சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் அபாயகரமானவை என்று டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பில்கிட்ஸ் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களில், “கட்டுப்பாட்டை மீறிய வகையில் ஏஐ தொழில்நுட்பம் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று ஒரு இயந்திரம் கருதுமானால், அவை நம்மை விட வேறுமாதிரியாக சிந்திக்கும் அல்லது நம்மைப் பற்றி கவலைப்படாது. ஆனால், கடந்த சில மாதங்களில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக பல வளர்ச்சிகளை கண்டுள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக விவாதிப்பது அவசியம்’’ என்று தெரிவித்தார்.