மாகாண சபைகளை பலவீனப்படுத்த அரசு முயற்சி: சாணக்கியன் குற்றச்சாட்டு
கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சரிடம் வைத்தியசாலைகள் தொடர்பில் கேட்ட போது மத்திய அரசாங்கம் மாகாண வைத்தியசாலைகளை எடுத்து சிறந்த வைத்தியசாலைகளை அமைக்கப் போவதாக கூறினார்.

மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த அரசாங்கம் முற்படக்கூடாது. சகல அமைச்சுகளும் மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சரிடம் பல வீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம். இதில் உள்ள பிரச்சினை என்வென்றால் எமது மாவட்டத்தில் அதிகமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டவை, அதேபோன்று பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கான நிதிகளை மத்திய அரசாங்கமே வைத்திருக்கிறது. மாகாண சபைகளுக்கு கீழுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் கேட்க முடியாது. இந்நிலையில் உங்களின் அமைச்சின் கீழ் மாகாண அமைச்சுக்கு ஏதேனும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒழுங்குகள் உள்ளனவா? என்றார்.
இதன்போது பதிலளித்த போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன கூறுகையில், வீதிகள் பல வகை உள்ளன. அவற்றில் மாகாண சபைகளுக்கு உரித்தான வீதிகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. நிதி மற்றும் தொழில்நுட்பம் என்பன கிடையாது. இதனால் அந்த வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமைகள் உள்ளன. எனினும் நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இவ்வாறான வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்து அதனை அபிவிருத்தி செய்யவும், தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் கூறுகையில்,
கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சரிடம் வைத்தியசாலைகள் தொடர்பில் கேட்ட போது மத்திய அரசாங்கம் மாகாண வைத்தியசாலைகளை எடுத்து சிறந்த வைத்தியசாலைகளை அமைக்கப் போவதாக கூறினார். அதேபோன்று நீங்களும் மாகாண வீதிகளை, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்து செய்யப் போவதாக கூறியுள்ளீர்கள். இதற்கு நிதி இல்லை என்பதே காரணமாகும்.
இந்நிலையில் மாகாண சபைகளை பலவீனமாக்கும் செயற்பாடுகளை எல்லா அமைச்சுகளும் செய்கின்றன. மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்தாமல் ஏன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என்றார்.