15 மில். டொலர் முதலீட்டில் ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு கைச்சாத்து
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உடுகமசூரிய வலியுறுத்தினார்.

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுக்கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் (Prof. Hans Keirstead) மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாலி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் சுகாதாரம், விவசாயம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல துறைகளிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளிலும் சோதனை செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான நீண்டகால தேவை காணப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, இன்றைய தினம் இலங்கைக்கு ஒரு விசேட நாள் என்றும், ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உடுகமசூரிய வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுடன் இணைந்து பிரதான ஆய்வகமாக செயல்பட்டு பல்வேறு துறைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை இந்த ஆய்வகத்தின் ஊடாக உறுதி செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகிறது.