செம்மணியில் இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
இதுவரை மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்பட்ட புதைகுழியில் மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் அகழ்வு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இதுவரை மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை புதிதாக நேற்றைய மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான பகுதியில் மண்டையோடு ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது என்றார்.





