இலங்கை - இந்தியா வலுசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சு
இந்திய உதவியுடன் இலங்கையில் ஒரு சூரிய சக்தி தகடுகள் உற்பத்தி வசதியை அமைத்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கை ஊழியர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல், நிறுவன மாதிரிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, இந்தியப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை அமைச்சரை சந்தித்து இலங்கை - இந்தியா வலுசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பினால் புது டெல்லியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட வலுசக்தி மாற்றம் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியுடன் இணைந்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் குமார ஜயக்கொடி , இந்திய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தற்போதைய கூட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வது, மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியப் வலுசக்தித் துறை அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல்களில் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான குறைந்தபட்ச விலையை உறுதிசெய்யும் வகையில், போட்டித்தன்மை வாய்ந்த கொள்வனவு வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்திய உதவியுடன் இலங்கையில் ஒரு சூரிய சக்தி தகடுகள் உற்பத்தி வசதியை அமைத்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கை ஊழியர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல், நிறுவன மாதிரிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களின் போது பல ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களும் எட்டப்பட்டதாக வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வலுசக்தி நிறுவனங்களின் கட்டமைப்பு மாதிரிகள் குறித்தும், இலங்கையின் வலுசக்தித் துறை இலக்குகளை அடையவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதிரிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.